அரண்மனை 3 படத்தில் பேயாக ஆர்யா நடிக்க உள்ளார் என தகவல் பரவி வருகிறது.
நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடி நிறைந்த பல படங்களை எடுத்து இருப்பவர் சுந்தர்.சி. அதே நேரத்தில் ஹாரர் படங்களிலும் அவர் மிரட்டி வருகிறார். அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய படங்களில் அவர் பேய் பட ரசிகர்களை கவர்ந்துவிட்டார். முதல் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார்.
ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அரண்மனை படத்தில் ஹன்சிகா பேயாக ஆண்ட்ரியாவை பிடித்துக்கொள்வது போலவும், இரண்டாவது பாகத்தில் த்ரிஷாவை பிடித்துக்கொள்வது போலத்தான் கதை இருக்கும். இந்த முறை ஆர்யா அந்த ரோலில் நடிக்க உள்ளார். அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடிகைகளுக்கு தான் பேயாக அலைவது போல கதை இருக்கும். ஆனால் மூன்றாம் பாகத்தில் சற்று வித்தியாசமாக ஆர்யாவுக்கு பேய் கதாபாத்திரத்தை சுந்தர்.சி வழங்கி இருக்கிறார். அவர் தனது கெரியரில் முதல் முறையாக பேயாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாகவே சுந்தர் சி காமெடிக்கு அதிக முக்கியத்துவம் வழங்குபவர் என்பதால் இதிலும் காமெடி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். யோகி பாபு மற்றும் விவேக் ஆகியோர் அரண்மனை 3ல் நடிப்பதாக முன்பே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆறு மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் விரைவில் அரண்மனை மூன்றாம் பாகத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.