முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா இன்று (19.06.2025) காலை 11.45 மணியளவில் நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியரின் நான்குசக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உயிரிழப்பைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன். ஆரமுத தேவசேனாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆரமுத தேவசேனாவின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும் எனவும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.