திருநெல்வேலி தொகுதி எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பா.ஜ. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சான்று ஆவணங்களாக பதிவு செய்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராகியிருந்த நயினார் நாகேந்திரன் சாட்சி கூண்டில் ஏறி, சத்திய பிரமாணம் செய்து, வாக்கு மூலம் அளித்தார்.
அப்போது, ராபர்ட் புருசுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள், சான்று ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. இந்த ஆவணங்களை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ததாக, நயினார் நாகேந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் சான்றாவணங்களாக பதிவு செய்ய ராபர்ட் புரூஸ் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, ராபர்ட் புரூஸ் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான கர்நாடகா உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள், சான்று ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. 19 நிமிடங்கள் ஆவணங்கள் பதிவு தொடர்பாக வாக்குமூலம் அளித்த நயினார் நாகேந்திரனிடம், ராபர்ட் புரூஸ் தரப்பில் குறுக்கு விசாரணை செய்வதற்காக, வழக்கு விசாரணை ஜூன் 26 ம் தேதிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளிவைத்தார். அன்றைய தினம் நேரில் ஆஜராகவும் நயினார் நாகேந்திரன் ஆஜராகவும் உத்தரவிட்டார்.