சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்தது அது இன்று காலை வரை நீடித்தது.

இன்று காலை 8 மணியளவில் சென்னையில் பலத்த மழை கொட்டியது.
சென்னை தலைமைச்செயலகம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த நேரத்தில் காலை 9.10 மணியளவில் கவிதா என்ற பெண் போலீஸ் தலைமைச் செயலக காவல் பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகத்துக்குள் சென்றார்.
அப்போது மழை பெய்து கொண்டே இருந்ததால் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பினார்.
அப்போது மழையுடன் வீசிய பலத்த காற்றில் தனிப்பிரிவு அலுவலகம் அருகே நின்ற பெரிய புங்கை மரம் திடீரென வேரோடு சாய்ந்து பெண் காவலர் கவிதா மீது விழுந்தது. இதில் அவர் மரத்துக்கு அடியில் சிக்கினார்.
கவிதாவின் தலை மரத்தின் அடியில் சிக்கியதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
தலையில் சிறிய ஹெல்மெட் மற்றும் ரெயின் கோட் அணிந்து கொண்டு கவிதா பணிக்கு வந்திருந்தார். மரம் விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கியதில் அவர் அணிந்திருந்த சிகப்பு நிற ஹெல்மெட் தனியாக கழன்று விழுந்து கிடந்தது.
உடனடியாக பெண் போலீஸ் உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மரம் அறுக்கும் எந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை அகற்றி நீண்ட போராட்டத்துக்கு பின்னர் போலீசின் உடலை மீட்டனர்.
மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண் போலீஸ் கவிதா திருமணமாகி தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கணவர் பெயர் சாய்பாபா. ரெயில்வே ஊழியர். மகன் அருண்குமார். 22 வயதாகும் இவர் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். மகள் பெயர் சினேகபிரியா 20 வயதான இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
பணியில் இருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் கவிதா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உயிரிழந்த கவிதா குடும்பத்தாருக்கு உடனடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.




