புதிய கல்விக்கொள்கையை அவசர கதியில் கொண்டு வந்தது ஏற்புடையதல்ல என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நேற்று புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் நேற்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்படி விவாதித்து, உரிய திருத்தங்களைச் செய்து செயல்படுத்துவதற்கு பதிலாக, கொரோனா பேரிடர் நேரத்தில் அவசரகதியில் மத்திய அரசு செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருப்பது ஏற்புடையது அல்ல. இதில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அம்சங்களைப் புறந்தள்ளிவிட்டு, அவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையானதை மட்டும் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக தினகரன் பதிவிட்டுள்ளார்.