புதிய கல்விக்கொள்கை மூலம் கல்வியை காவியமயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில்
இந்தியாவில் கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் நீண்ட நெடுங்காலமாக இருக்கின்றன. அதனால், அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 6 முதல் 14 வயது உள்ள அனைவருக்கும் கல்வி பெறுகிற உரிமை சட்டமாக நிறைவேற்றப்பட்டது. நகர்ப்புறங்களில் கிடைக்கிற தரமான கல்வி கிராமப்புறங்களில் கிடைக்கவில்லை. கல்வி வணிகமயமாகிவிட்ட நிலையில் தரமான கல்வி ஏழை, எளியவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் கிடைக்கவில்லை. அரசு பள்ளிகள் மூலமாகத் தான் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும். அதை வழங்குவதற்கு புதிய கல்விக் கொள்கையில் எந்தவிதமான வாய்ப்பும் இல்லை.
நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வந்த கல்விக் கொள்கைகளுக்கு முற்றிலும் புறம்பாக வகுப்புவாத கொள்கைகளை புகுத்தி மதச்சார்பற்ற கொள்கைக்கு உலை வைக்கும் நோக்கத்துடன் புதிய கல்விக் கொள்கையை பா.ஜ.க. அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் அறிஞர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
தமிழகத்தில் மூன்றாவது மொழி சமஸ்கிருத மொழியா? இந்தி மொழியா? அல்லது வேறு மொழியா என்பதை முடிவு செய்ய வேண்டிய இடத்தில் தமிழக அரசு உள்ளது. சமீபத்தில் மத்திய – மாநில அரசுகள் பாடத் திட்டங்களில் இருந்து மதச்சார்பின்மை, அரசமைப்புச் சட்டம், குடிமக்கள் உரிமைகள் மற்றும் விடுதலைப் போராட்ட மாவீரர்களான திப்பு சுல்தான் போன்றவர்களின் வரலாற்றுப் பாடங்களை நீக்குகிற முடிவையும் எடுத்திருக்கிறது.
இந்தப் பின்னணியில் பார்க்கிற போது, புதிய கல்விக் கொள்கையை காவி மயமாக்கும் முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் கடுகளவு விவாதம் கூட நடத்தப்படவில்லை. எனவே, புதிய கல்விக் கொள்கையை உடனடியாக நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடத்துவதோடு, அனைத்து மாநில அரசுகளோடு கலந்து பேசி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்