சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட
மதுரை, ஜூலை 31-
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், மருத்துவ சிகிச்சை நிறைவு பெற்று இன்று மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தனக்கு முதுகுத்தண்டுவடம், பின்பக்க கழுத்துப் பகுதியில் வலி இருப்பதாக சிறை நிர்வாகத்திடம் தெரிவித்து, சிகிச்சை அளிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். பாதிப்புக்கு ஏற்கெனவே சிகிச்சை பெற்ற ஆதாரங்களை சிறைத்துறை கேட்டது. இதற்கிடையில் கடந்த 22-ம் தேதி கைதிகளை பரிசோதிக்க சிறைக்கு வந்த எலும்புச் சிகிச்சை மருத்துவரிடம் தனக்கு கழுத்து வலி உள்ளதாக ஆய்வாளர் ஸ்ரீதர் கூறினார்.

அவருக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க, மருத்துவர் பரிந்துரைத்தார். இதைத்தொடர்ந்து ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதன்பின் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்டதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பின், அவருக்கு முதுகுத்தண்டு, கழுத்து வலி சரியானதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.