அதிமுக போராட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மேடையின் மீது ஓரமாக அமரவைக்கப்பட்டார்.
மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து கடந்த 2 தினங்களாக அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இபிஎஸ் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்களில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். ஆட்சி அதிகாரம் கிடைத்தது மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தானே தவிர, எதிர்கட்சியை அழிப்பதற்கு அல்ல, அதிமுக நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி, திமுக வீட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. நாங்கள் (அதிமுக) ஆட்சியில் இருக்கும் போது மின் கட்டணத்தை உயர்த்தவில்லை, மாறாக 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கினோம். ஆனால், திமுக அரசு ஈவு, இரக்கம் இல்லாமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.திமுகவின் கைகூலியாக சிலர் மாறியுள்ளனர். துரோகிகளை ஓட ஓட விரட்டுவோம் என்றார். அப்போது, இபிஎஸ்க்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின் மேடையின் மீது ஓரமாக அமரவைக்கப்பட்டார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-பா.ஈ.பரசுராமன்.