சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மொத்தமிருந்த 800 பேரில் 50 பேர் காரணமே இல்லாமல் மரணமடைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லோரும் ஒரே நாளில் இறந்துவிடவில்லை. ஆனால், கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்த கிராமத்தை சேர்ந்த 61பேர் இறந்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், கிராம நிர்வாகமோ 50-52 பேர் இறந்திருப்பதாக கூறுகிறது. மரணமடைந்த பலருக்கும் கால்களில் வீக்கம், மயக்கம் போன்றவை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் ஏன் இறந்தார்கள் என்ற காரணம் கண்டறியப்படவில்லை. இதையடுத்து சுகாதாரத்துறையினர் உண்மையை கண்டறியும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். கிராமத்தின் மண் மற்றும் குடிநீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுபற்றி சுக்மா மாவட்ட ஆட்சியர் ஹரிஸ் கூறுகையில், இந்த மரணங்களுக்கு பின்னால் குடிநீர்தான் காரணமாக இருப்பதாகவும், குடிநீரில் அனுமதிக்கப்படும் அளவை விட அதிகமாக ப்ளோரைடு இருப்பதாகவும் அதிக இரும்புச்சத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், தற்போது 41பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது தெரிய வந்திருப்பதாகவும் கூறினார்.