ஓணம் பண்டிகையை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கேரளாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று திருவோணம். ஆவணி மாதத்தில் வரக்கூடிய திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் இப்பண்டிகை 10 நாட்களுக்கு வெகுவிமர்சியாக நடைபெறும். மகாபலி சக்கரவர்த்தி தன் மக்களை காண வருவதாக நம்பிக்கை. இந்த பண்டிகையில் கைக்கொட்டுக்களி, புலிக்களி, யானைத்திருவிழா, கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள்,சிறப்பு உணவுகள், அத்தப்பூக்கோலம் என பல போட்டிகள் நடைபெறும். இதை காண சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் கேரளாவிற்கு செல்வது வழக்கம். திருவோணம் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்டு 30ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதிவரை நடைபெறுகிறது.
நம் மாநிலத்தின் எல்லைப்பகுதிகளான கோவை, கன்னியாகுமரி, நீலகிரி போன்ற பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படவிருக்கிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக,8 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரத்தில் இருந்து சேலம்,கோவை, பாலக்காடு, திரூர் வழியாக மங்களூருவுக்கு செப்டம்பர் 2ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து எழும்பூர், காட்பாடி, சேலம், திருப்பூர், கோவை,எர்ணாகுளம், கோட்டயம் வழியாக கொச்சுவேலிக்கு செப்டம்பர் 4ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் செப்டம்பர் 5ம் தேதி கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் ஓணம் பண்டிகைக்குச் செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.