தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில், ‘மோடி அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், இரும்புத்தாது மீதான 64 சதவீத உச்சவரம்பை நீக்கிய அரசு, பொதுத்துறை நிறுவனமான குத்ரேமுக் நிறுவனம் மட்டுமே இரும்புத்தாது ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது.
ஆனால் விலைமதிப்பற்ற இரும்புத்தாதுவை பல நிறுவனங்கள் சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்திருப்பதாக கடந்த மாதம் 10-ந்தேதி மத்திய சட்ட அமைச்சகம் கூறியுள்ளது’ என்று கூறினார்.
அந்தவகையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் புதிய சட்டத்தைப் பயன்படுத்தி 30 சதவீத ஏற்றுமதி வரியை செலுத்தாமல் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு தனியார் நிறுவனங்கள் இரும்புத்தாது ஏற்றுமதி செய்திருப்பதாகக் கூறினார். இதன் மூலம் மத்திய அரசின் ரூ.12 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இது குறித்து விசாரணை நடத்தி 2014-ம் ஆண்டு முதல் நடந்துள்ள ஊழலை சரிசெய்ய வேண்டும் எனவும் அவர் வலுறுத்தினார்.