இன்று நவம்பர் 8, பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்த தினம்
இந்தியர்கள் அனைவரையும் உலுக்கியெடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து, நான்கு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம்” என்றார். முழு நம்பிக்கையோடு மக்கள் அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்படுவதோடு, கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்ற பிரதமர், பயங்கரவாதிகளுக்கு பணம் செல்லுவது தடுக்கப்படுவதோடு இந்திய பொருளாதாரமும் உயர்த்தப்படும் என்றார். நாட்டின் எதிர்காலம் கருதி மக்கள் சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
தங்களின் பயன்பாட்டுக்காக வங்கிக் கணக்கிலிருந்து ஒற்றை 2,000 ரூபாயைப் பெறுவதற்காக, இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள் வரை மணிக்கணக்காக வங்கி வாசல்களில் காத்துக்கிடந்தார்கள். அடுத்த மூன்று மாத காலத்துக்கு, வங்கி ஏடிஎம் வாசல்களில் இந்த வரிசை தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. துயரம் மிகுந்த அந்த மாதங்களில், வங்கியில் பணம் எடுக்க நின்றே ஏராளமானோர் மரணமடைந்தனர். ஓராண்டு காலத்துக்கு ஏடிஎம்-களில் குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே பணம் எடுக்க முடிந்ததால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளில், 99.3% மதிப்புள்ள நோட்டுகள் திரும்பவும் வங்கிக்கே வந்துவிட்டன. அதாவது, மக்களின் பயன்பாட்டிலிருந்த 15 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயில், 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய்வரை திரும்ப வந்துவிட்டதாகவும், பத்தாயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரும்பப்பெறவில்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்மூலம், பணம் பதுக்கப்பட்டது என்ற வாதம் வலுவிழந்துபோனது.
இந்த நடவடிக்கையை பா.ஜ.க அரசின் மிகப்பெரிய சாதனை என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. விவசாயம், தொழில்துறை உட்பட அனைத்துத் துறைகளின் பொருளாதாரத்திலும் அது பாதிப்புகளை ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, நுகர்வுப் பொருள்களின் விற்பனை 40 சதவிகிதமாகச் சரிந்தது. இனிமேல் அனைத்து பணப்பரிமாற்றமும் டிஜிட்டல் மூலமே நடைபெறும் எனவும், ரூபாய் நோட்டைச் சாராத இந்தியப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல இந்த நடவடிக்கை உதவும் எனவும் பாஜக அரசு தெரிவித்தது.
வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய அரசு கால அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசத்திற்குள் பழைய நோட்டுகளை வங்கிகளில் தராமல், பிறகு கொடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்படி அபராதம் செலுத்தி, பலரும் பழைய நோட்டுகளை மாற்றினார்கள். அவ்வாறு வங்கிக்கணக்கில் வந்த தொகைகளிலிருந்து வருமான வரி, அபராதம் என்ற வகையில் வசூலிக்கப்பட்ட தொகை, அரசாங்கம் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவுதான். எனவே, இப்போதுவரை மீட்கப்பட்ட கறுப்புப்பணம் குறித்து எவ்வித தெளிவான புள்ளிவிவரமும் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படவில்லை.
புதிய 2,000 ரூபாய் நோட்டு அறிமுகமானதுமே கட்டுக்கட்டாகப் பதுக்கப்பட்டது மட்டுமின்றி, சிவகாசி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதும் தெரியவந்தது. தற்போது, 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்திருப்பதோடு, அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் வங்கிக்கணக்கு தொடங்க நிர்பந்திக்கப்பட்டதால், கணக்குகளின் எண்ணிக்கை உயர்ந்ததைப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நேர்மறை விளைவாகச் சொல்லலாம். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஜிஎஸ்டி-யும் அறிமுகமானதால், வங்கிவழிப் பணப்பரிமாற்றம், ஆன்லைன் பணப்பரிமாற்றம் ஆகியவை அதிகரித்திருப்பதையும் பணமதிப்பிழப்பின் விளைவுகளில் ஒன்றாகக் குறிப்பிடலாம்.