2022ம் ஆண்டு பஞ்சாப்பில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலி்ல் தனது சகோதரி மாளவிகா சூட் தேர்தலில் போட்டியிடுவார் என்று பாலிவுட் நடிகர் சோனு சூட் நேற்று அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர் நடிகர் சோனு சூட். பேருந்து வசதி தேவைப்படுவோருக்கு பேருந்துகள், விமான டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் செல்ல ஏராளமான உதவிகளை சோனு சூட் செய்தார்.
கொரோனாவில் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கவும் சோனு சூட் ஏற்பாடு செய்தார். இதனால் சோனு சூட் இந்தியாவிலேயே மிகப்பிரபலமானவராகவும் மக்கள் மதிக்கத்தக்க மனிதராகவும் மாறினார்.திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும், நடிகர் சோனு சூட் ரியல் ஹீரோகவாக மக்கள் மனதில் அரியாசணம் பிடித்தார்.
இந்நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது சகோதரி மாளவிகா சூட்டை தேர்தலில் போட்டியிடச் செய்யப்போவதாக சோனு சூட் நேற்று அறிவித்துள்ளார். மோகா நகரில் சோனு சூட், தனது சகோதரியுடன் அளித்த பேட்டியில், “என் சகோதரி மாளவிகா சூட் மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் சேர்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். ஆதலால், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது சகோதரி போட்டியிடுவார். எந்த கட்சியில் சேர்ந்து போட்டியிடுவார் என்பதை பின்னர் அறிவிப்பேன்” எனத் தெரிவி்த்தார்.
இதற்கிடையே சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், மோகா தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தக் கட்சியிலாவது இணைந்து மாளவிகா போட்டியிடுவாரா அல்லது சுயேட்சையாகவா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் சோனு சூட்டினை ஆத் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் ஆதரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.