கேரளாவில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளது. மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கேரளாவில் இன்று முதல் 15ம் தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வானிலை ஆய்வு மையம் விடுக்கும் சிவப்பு எச்சரிக்கை எனில், 24 மணிநேரத்தில் 20 செ.மீ. மழையும், ஆரஞ்சு எச்சரிக்கை எனில் 6 செ.மீ. முதல் 20 செ.மீ. மழையும் பெய்யும் என்பதற்கான கணிப்பு ஆகும்.
மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.