`உப்பு எதற்காக’ என்று கேட்டால், ‘சுவைக்காக’ என்று நம்மில் பலரும் சொல்லுவோம். ஆனால் சுவையைத் தாண்டி நிறைய விஷயங்கள் உப்பில் இருக்கிறது. உடலில் உப்பு அதிகமானாலும் குறைந்தாலும், அது பல நோய்களை உருவாக்கும்.
அடிப்படையில் சோடியம் க்ளோரைடு என்ற ரசாயனம்தான், உப்பு என்று அழைக்கப்படுகிறது. உடலில் உள்ள நீரின் அளவு, ரத்தத்தின் அளவு இரண்டும் குறையாமல் இருக்கவும், இதயத்தின் செயல்பாடு சீரான முறையில் இருக்கவும், நரம்புகளின் மூலமாக செய்திகளை உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு அனுப்பவும், உப்பிலுள்ள ரசாயனப் பொருள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
இந்த சோடியம், போதுமான அளவு கிடைக்காவிட்டால் அது சார்ந்த குறைபாடு ஏற்படும். அவ்வகை குறைபாடு ஹைபோநட்ரீமியா / சோடியம் குறைபாடு என்று அழைக்கப்படுகிறது. உடலில் சோடியத்தின் அளவு 135-145 மிலி / லிட்டருக்கு குறைவாக இருக்கும் போது, அது சோடியம் குறைபாடு என சொல்லப்படும். இந்த சோடியம் சத்தானது, எலக்ட்ரோலைட் திரவத்தின் முக்கிய மற்றும் அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளில் ஒன்றாகும், மேலும் திரவ – எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பதில் சோடியம் முக்கிய பங்காற்றுகிறது.
பொதுவாக சோடியம் குறைபாடு என்பது, ரத்த அழுத்தத்தை அலட்சியமாக அனுகுவதன் விளைவாகக்கூட இருக்கும். ஏனெனில் மற்றவர்களைவிடவும் ரத்த அழுத்தத்தை அலட்சியமாக அனுகுபவர்கள்தான், உணவில் உப்பு சேர்க்கும் விஷயத்தில் அதிக அலட்சியத்துடன் இருக்கிறார்கள். இதன் விளைவாக ரத்த அழுத்ததோடு சேர்த்து, சோடியம் குறைபாடும் உடலுக்குள் வந்துவிடுகிறது. உப்பால் வரும் நோய்கள் அத்தனை எளிதானதில்லை என்பதால், வந்த பிறகு கவலைப்படுவதைவிட, முன்னரே எச்சரிக்கையாக நடந்து கொள்வது புத்திசாலித்தனம்!
சோடியம் குறைபாடு இருப்பவர்களுக்கு தலைவலி, குமட்டல், குறைவான ரத்தஅழுத்தம், தசை பிடிப்புடன் கூடிய தசை வலி, தன்னிலையிழத்தல், வலிப்பு மற்றும் சுயநினைவிழத்தல் போன்றவை அறிகுறிகளாக இருக்கும். இந்தக் குறைபாட்டின் தாக்கம் குறைவாக இருந்தால், அறிகுறிகள் லேசானதாக இருக்கும். குறைபாடு அதிகரிக்க அதிகரிக்க, அறிகுறிகள் தீவிரமாக இருக்கும்.
குறைவான ரத்த அழுத்தத்தை போல, சோடியம் குறைபாடு ஏற்பட காரணமாக உள்ள வேறு சில பிரச்னைகள்:
- சிறுநீரக குறைபாடு.
- சோடியம் இழப்பை ஏற்படுத்தும் மருந்துகளை அதிகம் உட்கொள்ளுதல்.
- சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும் மனச்சோர்வு பிரச்னை
- அதிகமாக வலி மருந்துகள் உட்கொள்ளுதல்ல
இப்படி பல காரணங்களால் ஏற்படும் இந்த சோடியம் குறைபாட்டை மதிப்பீடு செய்ய, துவக்க நிலையில் உடல் சார்ந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேற்கட்ட மதிப்பீட்டுக்கு, உடலில் உள்ள திரவங்களான, ரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றில் சோடியத்தின் அளவை ஆய்வு செய்ய அவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இவற்றில் ரத்தப் பரிசோதனை தவிர சிலருக்கு கை, கால்கள், முகம் போன்றவற்றில் வீக்கம் அதிகமாக இருப்பதை வைத்தும் ஓரளவு அறிய முடியும்.
இந்த சோடியம் குறைபாடு இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்கள், நொறுக்குத் தீனிகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக பழங்கள், பயறு வகைகள் போன்ற இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும். அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் ஊறுகாயில் உப்போடு சேர்த்து எண்ணெய், காரம் போன்றவை அதிகம் சேர்க்கப்படும் என்பதால், ஊறுகாயை அறவே தவிர்க்கவும்.
சோடியம் குறைபாட்டை வருமுன் தடுப்போம்!
கட்டுரையாளர்:ஜெ. நிவேதா