12 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறமுடியாது மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மீண்டும் திட்டவட்டம்.
டெல்லி,
கடந்த மழைக்கால கூட்டத் தொடரின் போது அவை நடவடிக்கையின் கண்ணியத்திற்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்பிக்கள் நடந்து கொண்டதாக கூறி கடந்த 29ம் தேதி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில் குளிர்கால கூட்டத்தொடரின் 8-வது நாளான இன்றும் மாநிலங்களவையில் கடுமையான அமளி நிலவியது. இதன் காரணமாக கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது; மேலும் அவை ஒத்திவைப்பதற்கு முன்னதாக பேசிய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, அவை நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்டீர்கள் என்றும் இறுதி கூட்டத்தொடரில் மைக்கை உடைத்தது நீங்கள்தான் இப்போதும் கூட பூஜ்ஜிய நேரத்தில் உறுப்பினர்கள் கேட்கக்கூடிய கேள்விக்கு அமைச்சர்களை பதில் அளிக்க விடாமல் தடுக்கிறீர்கள்! என்றும் என்ன நிலைப்பாட்டில் எதிர்க்கட்சிகள் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
மேலும், 12 எம்பி க்கள் மீது தவறு இருப்பதன் காரணமாக தான் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் நிச்சயமாக 12 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற முடியாது என மாநிலங்களவையில் மீண்டும் ஒருமுறை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு உறுதிபட தெரிவித்தார்.