அரியர் தேர்வு நடத்துவது தொடர்பாக அட்டவணையை தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களும் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இதனை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி, மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை செய்தது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு,அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஏற்கனவே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
மாணவர்கள் நலன் கருதியே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு பதில் அளித்திருந்தது. மேலும் தற்போது கொரோனா சூழல் மாறி உள்ளதால் பல்கலைக்கழகங்கள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலமாக அரியர் தேர்வு தொடர்பான தேர்வு அட்டவணையை பிப்ரவரி 4ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.