என்னுடைய நண்பரின் குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் வரை மூன்றாவது மாதம் முகம் பார்ப்பது முதல் குப்புற விழுவது வரை அனைத்தும் சரியாகத்தான் செய்து வந்தது.
அதற்குப்பின் எதுவும் சரிவரச் செய்யவில்லை, எந்த வார்த்தையும் பேச முயற்சிக்கவில்லை, மற்றவர்கள் பேசுவதைக் கவனிப்பதுமில்லை, தவழுவதற்கு முயற்சிப்பதில்லை, ஒரு வயது ஆனபின்பும் கூட நடக்கத் தெரியவில்லை. இப்படி குழந்தைகள் பிறந்து ஒரு வயது வரை அடுத்தடுத்து செய்யக்கூடிய செயல்பாடுகள் எதையுமே சரிவர செய்யவில்லை.
அதனால் அவர்கள் அக்குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று, அக்குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைக்கு எந்தநேரமும் தொலைக்காட்சியில் ரைம்ஸ் போட்டுக் காண்பிப்பதால்தான் இந்த மாதிரி பிரச்சனைகள் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது என்று சொன்னார்கள். அதற்குப்பின், குழந்தைக்கு ஸ்பீச் தெரபி இன்னும் பல சிகிச்சைகள் அளித்தனர்.அதற்குப்பின் அக்குழந்தை மெதுமெதுவாக எல்லாம் செய்ய ஆரம்பித்தது .
இப்போதெல்லாம் எந்நேரமும் டீ.வி யில் ரைம்ஸ் என்று சொல்லப்படும் குழந்தைகள் பாடல்கள்தான் எல்லார் வீட்டிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதைப் பார்க்கலாம்.
குழந்தைகளின் கண்களைப் பாதிக்கும்
தொலைக்காட்சிக்கு மிக அருகில் இருந்து ரைம்ஸ் பார்ப்பதால், அது குழந்தைகளின் கண்களைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் தொலைக்காட்சியை மிக அருகில் இருந்து பார்த்தால், கண்களைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இலக்குகளை அடைவது தாமதமாகுதல்
குழந்தைகள் எந்நேரமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதால், அவர்கள் வளர்ச்சியின் அடுத்தடுத்த இலக்குகளை அடைவதற்குத் தாமதமாகிறது. அதாவது ஒரு குழந்தை பிறந்து மூன்று மாதத்தில் முகம் பார்க்க வேண்டும், ஒன்பது மாதத்தில் தவழ வேண்டும், ஒரு வயதினை அடைந்தவுடன் நடக்க ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் எந்நேரமும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதால், குழந்தைகள் தங்கள் அடுத்தடுத்த இலக்கினை அடைய முயற்சிப்பதில்லை
குழந்தைகள் இந்த பூமிக்கு வந்தபின்புதான் இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்கின்றனர். அதாவது அவர்களை சுற்றி நடப்பதை வைத்துத்தான் உலகம் எவ்வாறு இயங்குகிறது., எல்லோரும் என்ன மொழி பேசுகிறார்கள் எனத் தெரியும். ஆனால் எப்போதும் ரைம்ஸே பார்த்துக் கொண்டிருப்பதால், அந்த தொலைக்காட்சியில் வரும் கார்ட்டூன் பொம்மைளைத்தான் உலகம் என நம்பும் குழந்தைகள், அதில் வரும் கார்ட்டூன் கேரக்ட்டர்களைத்தான் தன் நண்பர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.
அதனால்தான் நம்மிடம் பேசாமல் அமைதியாக இருக்கும் குழந்தைகள், அந்த கார்ட்டூன் மொம்மைகளைப் பார்த்தால் ஏதோ பல நாட்கள் பழகிய மனிதர்களைப்போல் சந்தோசமாக இருக்கிறார்கள். அதாவது உயிருள்ள மனிதர்களிடம் பழகுவதற்குப் பதிலாக; உயிரற்ற கார்ட்டூன் பொம்மைகளைத்தான் உயிருள்ளவைகள் என நம்பித் தன்னுடைய உணர்ச்சிகளை மனிதர்களிடம் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக கார்ட்டூன் பொம்மைகளிடம் வெளிக்காட்ட ஆரம்பித்து விடுகின்றன.
அதனால் அவர்களின் இலக்குகளை அடைவதிலும் கவனம் செலுத்தத் தவறி விடுகின்றனர். ஒன்பது மாதத்தில் தவழ வேண்டிய குழந்தை டி.வி பார்த்துக்கொண்டே இருப்பதால் பத்து, பதினோரு மாதங்கள் ஆகியும் தவழ்வதற்கு முயற்சி செய்யாமல் இருப்பது,ஒரு வயதிற்கு மேல் ஆகியும் நடப்பதற்கு முயற்சி செய்யாமல் இருப்பது. இதுபோன்ற பல பிரச்சனைகள் குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படுகிறது.
மூளைச் செயல்திறன் குறைதல்
குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே இருப்பதில் கவனமாக இருப்பதால், அவர்களின் மூளையின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது குழந்தைகள் தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் அவர்களின் மூளைத்திறன் அதிகமாக இருக்கும். ஆனால், எந்நேரமும் தொலைக்காட்சியில் மூழ்கி இருப்பதால் அவர்களின் மூளைத்திறன் குறைந்து விடுகிறது.
குழந்தைகள் தூங்குவதில் சிக்கல்கள்
எப்போதும் டீ.வி யில் குழந்தைகள் ரைம்ஸ் பார்த்துக்கொண்டே இருப்பதால், அவர்களின் தூக்கம் பாதிக்கப்படுகிறது. அதாவது குழந்தைகள் தூக்கத்தில் அடிக்கடி பயந்து அழுவது, அல்லது ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லாமல் தூங்கும்போதும் விழிப்புடனே இருப்பது. இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.
தீர்வு
உங்கள் குழந்தைகளை முற்றிலுமாகத் தொலைக்காட்சி பார்க்கவிடாமல் தடுக்க முடியவில்லை என்றாலும்,தொலைக்காட்சி முன் அவர்கள் செலவிடும் நேரத்தையாவது கொஞ்சம் குறைக்க முயற்சி செய்யுங்கள்! மனிதர்களிடம் பேச விடுங்கள்,விளையாட விடுங்கள், அப்போதுதான் உங்கள் குழந்தைகள் உயிருள்ள பொருட்கள் எது; உயிரில்லாத பொருட்கள் எது என்ற வித்தியாசத்தை உணருவார்கள்.
இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தயவுசெய்து தொலைக்காட்சியை அணைத்துவிடுங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் மன அமைதியுடன் ஆழ்ந்து தூங்குவார்கள் !.