மட்டனில் குழம்பு, சுக்கா, பிரியாணி என வகைவகையாய் செய்திருப்போம். ஆனால், இன்று குழந்தைகளுக்கு பிடித்த சுவையான மட்டன் ஸ்ட்யூ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
காலையில் தினமும் இட்லி, தோசை, உப்மாதானா என்று கேட்கும் குழந்தைகளுக்கு,இனி நாமும் வீட்டிலேயே, சுவையான மட்டன் ஸ்ட்யூ செய்துக் கொடுத்து அசத்தலாம்.மட்டன் ஸ்ட்யூ சாப்பிட ஹோட்டல் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை, வீட்டிலேயே செய்யலாம்.
குழந்தைகளின் பிறந்தநாள் போன்ற விழாக்களில் செய்து கொடுத்து பிள்ளைகளை மகிழ்விக்கலாம்.மட்டன் ஸ்ட்யூ, இடியப்பம் மற்றும் ஆப்பத்திற்கு சரியாகப் பொருந்தும். இதில் சேர்க்கக்கூடிய தேங்காய் பால், இதன் சுவையை மேலும் கூட்டுகிறது.
தேவையான பொருட்கள்
- மட்டன் – ½ கிலோ (எலும்பு இல்லாதவை)
- பட்டை, இலவங்கம், கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு
- இஞ்சி – ஒரு சிறு துண்டு(நறுக்கியது)
- வெங்காயம் – 1
- தக்காளி – 2
- உருளைக்கிழங்கு – 2
- பச்சை மிளகாய் – 3
- மிளகு பொடி – சிறிதளவு
- தேங்காய் பால்
- கறிவேப்பிலை
- நெய் – தேவையான அளவு
- சிறிய வெங்காயம் – 6
- தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
- சோளமாவு – 2 ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
- ஒரு பிரஷர் குக்கரில், ½ கிலோ மட்டனை சிறிய துண்டுகளாக வெட்டி, 1 கப் தண்ணீருடன், மிளகு மற்றும் உப்பு சேர்த்து, 8 முதல் 10 விசில்களுக்கு மட்டனை நன்றாக வேக வைக்கவும்.மட்டன் இன்னும் வேகாமல் இருந்தால், மேலும் 3 விசில்களுக்கு வேக வைக்கவும்.
- இதற்கு தேங்காய் பால் தயாரிக்க 3/4 கப் தேங்காயை எடுத்துக் கொள்ளவும். முதலாம் மற்றும் இரண்டாம் பாலைப் பயன்படுத்தவும்.
- உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக வெட்டி,அதனுடன் தக்காளியை சேர்த்து, ½ கப் தண்ணீரில், பிரஷர் குக்கரில் 2 விசில்களுக்கு சமைத்து, தனியே வைக்கவும்.
குறிப்பு
உருளைக்கிழங்கை மசித்து சேர்த்துக் கொள்ளலாம் அல்லது துண்டுகளாகவும் சேர்த்துக் கொள்ளலாம். இது உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்தது. நீங்கள் உருளைக்கிழங்கை மசிக்க விரும்பினால், உருளைக்கிழங்கில் பாதியை மசித்து, மீதமுள்ளதை அப்படியே விடவும்.இதனால் ஒரு திக்கான கிரேவி கிடைக்கும்.
ஸ்ட்யூ செய்ய
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி பட்டை, இலவங்கம், கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும். இதற்கு மசாலாப் பொருட்களின் சுவை மிகவும் குறைவாகவே இருக்க வேண்டும். எனவே சிறிதளவு சேர்த்தாலே போதுமானது.
- இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- வெட்டி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை நன்றாக வதக்கவும்.
- பச்சை மிளகாய், மிளகு மற்றும் உப்பு சேர்க்கவும். இந்த செய்முறையில் மிளகினுடைய சுவை முக்கியமானது. சில விநாடிகள் வதக்கவும். நீங்கள் ஒரு காரமான ஸ்ட்யூ விரும்பினால், இன்னும் சில பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளவும்.
- சமைத்த உருளைக்கிழங்கு, தக்காளி கலவையை இதனுடன் சேர்க்கவும். ஒரு நிமிடம் அப்படியே விடவும்.
- எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பாலில், இரண்டாம் பாலினை சேர்க்கவும்.
- இதனுடன் மட்டனையும், அதை வேக வைக்கப் பயன்படுத்தின தண்ணீரையும் சேர்த்துக்கொள்ளவும்.
- பிறகு, சோளமாவு மற்றும் தண்ணீரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து, கடாயில் சேர்க்கவும்.
- கடைசியாக, முதலாம் தேங்காய்ப் பாலை சேர்க்கவும். முதலாம் தேங்காய்ப் பாலைச் சேர்த்த பிறகு, நீண்ட நேரம் கொதிக்க விட வேண்டாம். ஒரு நிமிடம் மாத்திரம் கொதிக்க விடவும்.
தாளிக்க
- ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி, வெட்டி வைத்துள்ள சிறிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் சிறிது மிளகு தூள் சேர்க்கவும்.
- இதனை செய்து வைத்துள்ள ஸ்ட்யூவில் சேர்க்கவும்.
அவ்வளவு தான், சுவையான மட்டன் ஸ்ட்யூ ரெடி. இதனை இடியப்பம் அல்லது ஆப்பத்துடன் சேர்த்துப் பரிமாறவும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.