‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று தொடங்கியது.
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக இன்று முதல் விண்ணப்பங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று தொடங்குகிறது. இந்தப் பணியின் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கப்படுகிறது. இந்தப் பணி மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் முதல் முகாமினை வரும் ஜூலை 15 ஆம் தேதி கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த முகாம்கள் ஜூலை 15 முதல் நவம்பர் வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. மக்களுக்கு அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே கொண்டு செல்வது இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.
அத்துடன் முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல்நலனை பேணும் வகையில் மருத்துவ முகாம் நடத்தப்படும். இந்தத் திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், தன்னாா்வலா்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் சமர்ப்பிக்கலாம்..




