அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுகவில் புதிய பதவி நியமனங்களை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் எனக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, தற்போதைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, பொதுச் செயலாளர் பதவியை நீக்கித் தீர்மானம் நிறைவேற்றினர்.
பொதுச் செயலாளர் பதவியை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது கட்சியின் விதிகளுக்கு முரணானது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு முரணானது. கட்சியில் தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய இரட்டைத் தலைமையை உறுப்பினர்கள் விரும்பவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து 2014 அக்டோபரில் நடத்தப்பட்ட உட்கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதால், உட்கட்சித் தேர்தலை நடத்த அதிமுகவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு 2020 ஆகஸ்ட் மாதத்தில் மனு அளித்தேன். இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளித்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், விரைவில் தேர்தல் நடத்துவதாக உறுதியளித்தனர். ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.
கட்சியின் விதிகளுக்கு முரணாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புதிய விதிகளின்படி செயல்படக் கட்சிக்குத் தடை விதிக்க வேண்டும். பழைய விதிகளின்படி கட்சி செயல்பட உத்தரவிட வேண்டும். மேலும், கட்சியில் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு அவைத் தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தடை விதிக்க வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டது.
இந்த மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற அளித்த உத்தரவின் பேரில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களின் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கில் இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்தை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சட்டவிரோதம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் எடுத்த முடிவை தேர்தல் ஆணையம் ஏற்றதில் தவறில்லை எனக் கூறி, ஓபிஎஸ், இபிஎஸின் பதவிகளுக்கு எதிரான வழக்கினை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுகவை கைப்பற்ற வி.கே சசிகலா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, சசிகலாவிற்கு பாதகமாகவும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சாதகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.




