பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவனியாபுரம் ஜல்லிகட்டையும் பார்வையிடுகிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால் அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. முதற்கட்டப் பிரச்சாரங்கள் தற்போதே சூடுபிடிக்கத் துவங்கிவிட்டன. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த அமித் ஷா முன்னிலையில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதிசெய்யப்பட்டுவிட்டது.
தேர்தல் நெருங்குவதால் தேசிய அளவிலான தலைவர்களும் தமிழகத்திற்கு வர ஆரம்பித்துவிட்டனர். நாளை மறுநாள் சென்னை மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். அதேபோல சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்விலும் அவர் கலந்துகொள்கிறார்.
இம்மாத இறுதியில் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் என்றும், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடுவார் என்றும் காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். இந்த நிலையில் நாளை மறுநாளே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகம் வர இருக்கிறார்.
read more: திமுகவின் கிராம சபை என்ன செய்தது? ஆதரத்துடன் முதல்வருக்கு பதில் சொன்ன ஸ்டாலின்
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த வருடம் நாளை மறுநாள் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. இதனையடுத்து, நாளை மறுநாள் தமிழகம் வரும் ராகுல் காந்தி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிடுகிறார்.
அதன்பிறகு காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். ஒரே நேரத்தில் இரண்டு அரசியல் கட்சிகளின் தேசியத் தலைவர்களும் தமிழகம் வரவுள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.




