எனக்கு சாதகமற்ற சூழல் நிலவினால் நிச்சயம் 100 சதவீதம் காங்கிரசை விட்டு விலகுவேன் என்று புதுச்சேரி எம்.எல்.ஏ. ஜான்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி எம்.எல்.ஏ.
புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் சமீபத்தில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமாரை சந்தித்தார். இந்த சந்திப்பு கட்சித் தலைமையில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தனிப்பட்ட சந்திப்பு
நான் ஏற்கெனவே பெங்களூரில் 2 முறை பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவைச் சந்தித்துள்ளேன். தற்போதைய சந்திப்பு கட்சி ரீதியான சந்திப்பு இல்லை. தனிப்பட்ட முறையில் நான் சந்தித்தேன். தற்போது வரை காங்கிரஸில்தான் நீடிக்கிறேன். காமராஜரையே தூக்கியெறிந்த கட்சி காங்கிரஸ். உண்மையில் நான் ஏமாற்றப்பட்டவன்.
காங்கிரசை விட்டு விலகுவேன்
எனக்குச் சாதகமற்ற சூழ்நிலை நிலவினால் 100 சதவீதம் காங்கிரஸை விட்டு விலகுவேன். என்னால் 5 எம்.எல்.ஏ.க்களை உருவாக்க முடியும். என்னுடைய தொகுதியில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியுமா என்ற கேள்வியைச் சவாலாகவே சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.