பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் தினமும் சராசரியாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி வருகிறது. அதுபோலவே முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட அனைவருமே கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வரிசையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டாவும் இணைந்துள்ளார்.
ஜே.பி.நட்டாவுக்கு இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து நான் சோதனை செய்தேன். பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனையை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். நட்டா நலம்பெற பல தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
read more: கர்ணன் தலைப்பை பயன்படுத்தக் கூடாது: தனுஷுக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பாஜக முக்கிய தலைவர் அமித் ஷா சமீபத்தில் சென்னை வந்துசென்றார். அதுபோலவே இந்த மாதம் இறுதியில் நட்டா இரண்டு நாள் பயணமாக தமிழக வர இருந்தார். ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் தமிழக வருகை ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு முதல் பயணமாக நட்டா தமிழகம் வரலாம் எனக் கூறுகிறார்கள் பாஜகவினர்.