ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக நாடகமாடுகிறாரா என்னும் கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதில் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 13ஆம் தேதி மதுரையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். இரண்டாவது தலைநகராக மதுரை அறிவிக்கப்படும், இல்லத்தரசிகளுக்கு ஊதியம், பெண்களுக்கு அமைச்சரவையில் 50 சதவிகித பங்கு, வீடு தோறும் இணையம் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
தனது மூன்றாவது கட்ட பிரச்சாரத்தை நேற்று திருச்சியில் தொடங்கினார் கமல்ஹாசன். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி வந்தார். ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் காத்திருந்த கட்சியினர், பொதுமக்களுக்கு கையசைத்துவிட்டு பிரச்சாரம் துவங்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் இடம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் அமைப்பினருடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.பிறந்த குழந்தைக்கு பெண்ணாக இருந்தால் 300 ரூபாயும், ஆண் பிள்ளையாக இருந்தால் 500 ரூபாயும் மருத்துவமனையில் லஞ்சம் வசூல் செய்யப்படுகிறது. பிறப்பு சான்றிதழுக்கு 200 ரூபாய் வாங்குகிறார்கள். ஆண் குழந்தையாக இருந்தால் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றார்.
read more: முதல்வர் பதற்றப்பட வேண்டாம்: பதிலடி கொடுத்த துரைமுருகன்
மக்கள் நீதி மையம் தலைமையில் 3ஆவது அணி அமையும். கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிக்கப்படும் என்ற கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யமும் திராவிடக் கட்சிதான். இங்கு தமிழ் பேசும் அனைவருமே திராவிடர்கள்தான் என்றார். ரஜினி கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா என்ற கேள்விக்கு, “40 ஆண்டு கால நண்பர் ரஜினியின் உடல் ஆரோக்கியம்தான் முதலில் முக்கியம். அதன் பிறகு எல்லாமும் சரியாகும்” என தெரிவித்தார் கமல்ஹாசன். அதாவது ரஜினிக்கு கட்சியை விட உடல்நிலைதான் முக்கியம் என கமல் கூறுகிறார்.




