மு.க.ஸ்டாலின் தேர்தலை மையமாக வைத்து தினமும் எங்களை வசைபாடுகிறார் என்று மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு திட்டம்
தமிழக அரசால் சுமார் ரூபாய் 1,296 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்குக் குடிநீர் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம். அரசு அறிவிக்கும் திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி, மக்கள் மனதில் நிலை பெற்றிருக்கின்றோம். தமிழ்நாடு முழுவதும் 76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
76 கூட்டுக்குடிநீர் திட்டம்
தமிழ்நாடு முழுவதும் இன்றைய தினம் 7,600 எம்.எல்.டி. குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகிறோம். இந்த ஒன்றரை ஆண்டுகளில் கூடுதலாக சுமார் 2,700 எம்.எல்.டி. தண்ணீர் தடையில்லாமல் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 76 கூட்டுக் குடிநீர் திட்டங்களும் நிறைவேறுகிறபோது, தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையே இல்லையென்கிற நிலையை உருவாக்குகின்ற அரசாக இந்த அரசு திகழும். இந்தத் திட்டம் 2023ம் ஆண்டில் முழுமையாக நிறைவேற்றப்படும்.
கண்களுக்கு தெரியவில்லையா?
சீர்மிகு திட்டத்தின் கீழ், மதுரை மாநகரத்தில் ரூபாய் 974.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசால் நிறைவேற்றப்படும் இத்தனை திட்டங்களும் எதிர்க்கட்சியினர் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. பார்க்கின்ற பார்வையில் கோளாறா? மனதில் கோளாறா? இந்தத் திட்டங்களை யாரும் மறைக்க முடியாது. ஆனால், இந்த ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை, இந்த ஆட்சி ஒரு தண்ட ஆட்சி என்று தி.மு.க. தலைவர் சொல்கிறார். அவர் வெளியில் வந்து பார்த்தால்தானே இங்கே நடைபெறுகிற பணிகள் தெரியும்.
வீண்பழி
அறையின் உள்ளே அமர்ந்து பார்த்தால் அறைதான் கண்ணுக்குத் தெரியும். எனவே, அறையிலிருந்து வெளியில் வந்து பாருங்கள். ஒரு அரசு எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதாவது ஒரு அவதூறு செய்தியைச் சொல்லி, எப்பொழுதும் எங்கள் மீது பழி சுமத்துவதுதான் இவர்களுடைய வாடிக்கை. இவர்கள் என்ன செய்வோம் என்று இதுவரை எதுவும் சொல்லவில்லை.
பதில் சொல்ல தயார்
ஆனால், நாங்கள் செய்ததையும் பாராட்ட மனம் கிடையாது. ஒரு அரசாங்கம் அமைப்பது என்றால், அந்த அரசாங்கத்தில் என்னென்ன திட்டங்கள் நிறைவேறுகிறது என்பதை நாங்கள் புள்ளிவிவரங்களோடு கூறுகிறோம். ஏதாவது பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள், அதற்கு நாங்கள் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றோம். அடுத்த சந்ததியினருக்கு குடிநீர் பிரச்சினை வரக்கூடாது என்ற அளவிற்கு தொலைநோக்குப் பார்வையோடு இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கின்றோம்.
துணை முதல்வர் காரணம்
தமிழக அரசைப் பொறுத்தவரை, எங்கு குடிநீர் பிரச்சனை இருந்தாலும், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து விரைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். 40 லட்சம் குடிநீர் இணைப்புகள் கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ரூபாய் 3,600 கோடி மத்திய, மாநில அரசின் நிதியிலிருந்து இந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்துக் கொடுக்கின்றோம். இரவு, பகல் பாராமல் எங்களுடைய அமைச்சர்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு செயலாக்கத்திற்குக் காரணம் துணை முதல்வர். நான் முதல்வராக இருந்தாலும், அவர் நிதி அமைச்சராகப் பல ஆண்டுகாலம் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்று, மிகுந்த அனுபவம் இருப்பதால் இவ்வளவு திட்டங்களையும் நாங்கள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றோம்.
வசைபாடாத நாளில்லை
ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவையான நிதி ஆதாரத்தைப் பெருக்கி, அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தூணாக விளங்கிக் கொண்டிருக்கிறார் துணை முதல்வர். எல்லாத் துறைகளிலும் தேசிய விருதுகளை குவித்த அரசாக எங்களது அரசு திகழ்கிறது. ஏழை மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற ஒரே அரசாக இந்த அரசு இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் விரைவாக தொடங்கவிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேர்தலை மையமாக வைத்து எங்களை வசைபாடாத நாளே கிடையாது, அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார். நாங்கள், மக்களை நேரடியாகச் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் எவ்வாறு நிலைமை இருக்கின்றது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கண்ட கனவை தமிழக அரசு நனவாக்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.