விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை நேர்மையாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை நேர்மையாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த நிலையில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் ‘டெல்லி சலோ’ அழைப்பை ஏற்று நவம்பர் 26, 27, 28 தேதிகளில் விவசாயிகள் தலைநகர் டெல்லி நோக்கி அணிவகுத்து வந்தனர்.
மத்திய அரசு விவசாயிகளை டெல்லி நகருக்குள் அனுமதிக்காமல், உணவளிக்கும் உழவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசு யுத்தத் தாக்குதல் நடத்தியது.
நேர்மை வேண்டும்
விவசாயிகளின் மாபெரும் எழுச்சியின் நிர்பந்தத்தால் டிசம்பர் 3-ம் தேதி மத்திய அரசு, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதற்கிடையில் உள்துறை அமைச்சர் டிசம்பர் 3-ம் தேதிக்கு முன்பாகவே பேசத் தயார் என அறிவித்துள்ளார்.
மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் அமைய வேண்டும். விவசாயிகள் உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும். பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடித்து ஏமாற்றும் வஞ்சக எண்ணம் இருந்தால் அது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமையும் என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.