தபால் வாக்கு செலுத்த எதிர்ப்பு தெரிவித்து திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்கு அளிக்கும் முறையை அமல்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டது.
அதில், தபால் ஓட்டை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரி தான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என விதி உள்ளதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காகப் போராடும் ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக் மற்றும் 86 வயது முதியவர் துரை ஆகியோரும் வழக்கு தொடர்ந்தனர்.
இவை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில்“புதிய நடைமுறை காரணமாக ரகசியமாக வாக்களிக்கும் முறை பாதிக்கப்படும். 30 சதவிகிதம் பேர் தபால் வாக்குகளைப் பதிவு செய்யக் கூடும்” என்று சுட்டிக்காட்டினார். தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு விட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் முன்கூட்டியே உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
டிசம்பர் 3 இயக்கம் சார்பிலும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. துரை தரப்பில், சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
read more: இடஒதுக்கீட்டை அடையும் வரை ஓயமாட்டோம்: ராமதாஸ் அறிவிப்பு!
அனைத்து வாதங்களையும் கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தரப்பு கருத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டது. இவ்வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.