தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து டி.ஆர்.பாலு டி.ஜி.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார்.
டி.ஜி.பி.யிடம் புகார்
திருக்குவளையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆகியோர் டி.ஜி.பி.யிடம் இதுதொடர்பாக புகார் அளித்தனர். இதையடுத்து, டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
உதயநிதி கைது
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2-3 தினங்களாக இளைஞரணிக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் தன் பணிகளை மேற்கொள்ளும்போது காவல் துறையினர் திடீர் திடீரெனெ அவர்களை கைது செய்கின்றனர். ஒவ்வொரு நாளும் காக்க வைக்கப்பட்டு இரவு 10-11 மணிக்கு விடுதலை செய்யப்படுகிறார்.
தி.மு.க.வுக்கு ஒரு நீதி? பா.ஜ.க.வுக்கு ஒரு நீதி?
வேல் யாத்திரை நடத்தும் பா.ஜ.க.வினரை கைது செய்து மாலை 4-5 மணிக்கு வெளியில் விடுகின்றனர். ஆனால், உதயநிதியை பல மணிநேரம் காக்க வைக்கின்றனர். இத்தகைய தியாகத்தை செய்ய அவர் தயார்.
இந்த கொடுமை நடப்பதை தட்டிக் கேட்க வேண்டும். ஒரு அராஜக ஆட்சி நடக்கிறது. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது டி.ஜி.பி.யின் கடமை. அந்த கடமையிலிருந்து அவர் தவறியிருக்கிறார் என நேரடியாக சொன்னோம். பா.ஜ.க.வுக்கு ஒரு நீதி. தி.மு.க.வுக்கு ஒரு நீதியா? அமித் ஷா வந்தார். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டதா? இவ்வாறு அவர் கூறினார்.