உலகிலேயே மிக உயரத்தில் பறக்கும் பறவை இனங்களில் ஒன்று ஆண்டியன் கான்டார்(Andean Condor). 15 கிலோ எடையும் 10அடி நீள இறக்கைகளை கொண்டுள்ள இப்பறவை தன் இறக்கைகளை பயன்படுத்தாமல் 100மைல்கள் வரை பறப்பதை விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதன் மூலம் அவற்றின் பறக்கும் திறன் எவ்வளவு சிறப்பானது என்பது தெரியவந்துள்ளது.
தென் அமெரிக்காவின் பெண்டகோனியா பகுதியில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் 8 ஆண்டியன் கான்டார் பறவைகளின் மீது ஒரு சிறப்பு கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். இதன் மூலம் அவற்றின் அசைவுகளையும் இறக்கைகளை எவ்வளவு முறை அசைத்து பறக்கின்றன என்பதையும் கண்காணிக்க முடியும். 250மணிநேரம் பதிவு செய்யப்பட்டதில் 1% மட்டுமே அவை தங்கள் இறக்கைகளை பயன்படுத்தியது ஆச்சரியைத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக ஒரு பறவை 100 மைல் அதாவது 160கிலோ மீட்டர் தொலைவை இறக்கைகளை பயன்படுத்தாமல் கடந்துள்ளது தெரியவந்துள்ளது.”கான்டார் பறவைகள் திறன் வாய்ந்தவை தான் ஆனால் இவ்வளவு திறமைசாலிகள் என்பது தெரியாமல் போய்விட்டது” என்கின்றனர் பறவை ஆய்வாளர்கள்.
காற்றின் வேகத்தை புரிந்து கொள்வதன் மூலமாகத் தான் இவற்றால் இவ்வளவு தூரம் இறக்கைகளை அசைக்காமல் பறக்க முடிகிறது.பல மணிநேரம் உணவு தேடி அலையும் கான்டார் பறவைகளுக்கு இந்த திறன் மிகவும் இன்றியமையாததாக கருதப்படுகிறது.
பொதுவாக ஒரு வாரத்தில் தானாகவே பறவைகளின் உடலில் இருந்து கீழே விழுந்து விடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவிகள் gps மூலம் விழுந்த இடத்தில் இருந்து மீட்டு எடுக்கப்படும். சில சமயங்களில் மிக உயரிய மலை சிகரங்களில் அல்லது பொந்துகளில் பறவை கூடுகளில் அவை விழுந்து விட வாய்ப்புள்ளது. அப்போது அந்த கருவியை கண்டெடுக்க அவர்களுக்கு பல நாட்கள் ஆகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்