உடலில் ஆக்சிஜன் அளவை கணக்கிட உதவும் ஆக்சி மிட்டரின் சோதனை அனைவருக்கும் அவசியமானது அல்ல என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை குறைக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கணக்கிட, ‘ஆக்சிமீட்டர்’ என்ற கருவி தற்போது பல இடங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிலசமயம், நல்ல உடல்நிலையுடன் இருப்பவர்களுக்கும் இந்த கருவியில் ஆக்சிஜன் அளவு குறைத்து காட்டப்படுவதால், பொதுமக்களிடையே நமக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து கோவை, பி.எஸ்.ஜி., பல்நோக்கு மருத்துவமனை நுரையீரல் நலம் மற்றும் உறக்க நல டாக்டர் பரத் செண்பகராஜ் விளக்கமளித்துள்ளார். அதன்படி, கொரோனாவால் நேரடியாக பாதிக்கப்படும் பகுதி நுரையீரல் என்பதால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்ள, ஆக்சிமீட்டர் கருவி பயன்படுகிறது. எளிமையாக அனைவராலும் பயன்படுத்தபடக் கூடிய சிறிய வடிவிலான இதன் விலை, 1,100 முதல், 4,000 ரூபாய் வரை, பல சிறப்பம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த கருவி மூலம் உடலின் ஆக்சிஜன் அளவுடன் நாடித் துடிப்பையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த சிறிய கருவியை, கிளிப் போல, கை விரல், கால் விரல், காது மடல்களிலும் பொருத்திக் பரிசோதனை செய்து கொள்ளலாம். நுரையீரல், காசநோய், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், இதை வைத்துக் கொண்டு, அவ்வப்போது பார்த்துக் கொள்வது நல்லது. இந்த கருவியில், ஆக்சிஜன் அளவு 95 – 100 வரை காட்டினால், நல்லநிலையில் உள்ளதாக கருதலாம். சில நேரங்களில், நல்ல உடல் நலத்துடன் இருப்போருக்கும், 92 – 94 வரை காட்டும் அதற்காக அஞ்ச வேண்டாம்.
சில முறை, மூச்சை நன்றாக இழுத்து வெளியே விட, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து விடும். பிறகும் 94க்கு கீழ் இருக்கிறது என்றால், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதை ஆராய வேண்டும். மேலும், அதனுடன் சேர்ந்து, மூச்சு வாங்குவது, சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி, வறட்டு இருமல், சுவை அறியும் சக்தி இழத்தல், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகள் இருந்தால், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுவாகவே அனைவரும், கடல் மட்டத்தில் தான் வாழ்கிறோம். ஆனால், கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில், பல ஆண்டுகளாக வாழ்வோருக்கு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாகத் தான் இருக்கும். ஏனெனில், அந்த பகுதிகளில், ஆக்சிஜன் அளவு குறைவு என்பதால், இந்த பிரச்னை இருக்கும்.அந்த பகுதிகளில் வசிப்போர், ஆக்சிமீட்டரின் நார்மல் அளவை பார்த்து அஞ்சத் தேவையில்லை என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விரல்களை ஆட்டிக் கொண்டிருந்தாலோ, நகத்துக்கு பாலிஷ் போட்டிருந்தாலோ, மிக அதிக வெளிச்சத்தில் இந்த கருவியை பயன்படுத்தினாலோ, சரியான அளவை காட்டாது என தெரிவித்தவர், உடற்பயிற்சி செய்த உடன் இந்த கருவியை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்