கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று, இந்திய திருநாட்டிற்க்கு பெருமை சேர்த்த, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (26) கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற இருக்கிற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற தகுதி பெற்றுள்ள இவர், சோன்பேட் நகரில் உள்ள தனது கிராமத்தில், தனது பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் தான், இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட்டார். விருது வழங்கும் விழாவிற்கான ஒத்திகைக்கு முன், அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதன் முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எனக்கு நேற்று எடுக்கப்பட்ட COVID-19 பரிசோதனையில், எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. எனக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இதுவரை எதுவுமில்லை, ஆனால், என்னைநானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது குடும்ப உறுப்பினர்களும் தங்கலை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும், சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்! நன்றி” என அவர் பதிவிட்டுள்ளார்.