ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி, விராட் கோலியின் அபார ஆட்டத்தால், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 169 ரன்களை சேர்த்தது.
இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி வீரர்கள், பெங்களூர் அணியின் துல்லியமான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே திணற தொடங்கினர். வாஷிங்டன் சுந்தர் வீசிய அடுத்தடுத்த ஓவரில், தொடக்க வீரர்களான டூபிளசி 8 ரன்களிலும், வாட்சன் 14 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதனால், சென்னை அணி 25 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து, 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த, ராயுடு-ஜெகதீசன் இணை நிதானமாக ஆட தொடங்கினர். விக்கெட் இழப்பை தடுக்கும் நோக்கில் இருவரும் ஆடியதால், அணியின் ரன் ரேட் மளமளவென சரிந்தது.
ஆனாலும், 10வது ஓவருக்கு பிறகு இருவரும் அதிரடி காட்ட தொடங்கினர். ஓவருக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஓவருக்கு ஒரு பவுண்டரி என சராசரியாக 10 ரன்களை சேர்க்க தொடங்கினர். 33 ரன்கள் எடுத்திருந்தபோது, எதிர்பாராத விதமாக ஜெகதீசன் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த தோனியும் தன் பங்கிற்கு ஒரு சிக்சரை மட்டும் விளாசி விட்டு 10 ரன்களுக்கு நடையை கட்ட, சாம் குர்ரன் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் நிதானமாக ஆடிக் கொண்டிருந்த ராயுடுவும், 40 பந்துகளில் 42 ரன்களை சேர்த்து உடானா பந்துவீச்சில் போல்டானார். பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா 7 ரன்களுக்கு நடையை கட்டினர். இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியுற்றது.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக, மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், சுந்தர் 2 விக்கெட்டுக்களையும் விழ்த்தினர்.