ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர், கடந்த 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இந்த இரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 4 முறை சம்பியனான மும்பை 13 முறையம், பஞ்சாப் அணி 11 முறையம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணிகள், தலா ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் 5வது இடத்திலும், மும்பை அணி 6வது இடத்திலும் உள்ளது.
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினாலும், சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது. ரோகித் சர்மா, டீ காக், இஷான் கிஷான், பொல்லாட், பாண்டிய பிரதர்ஸ் மற்றும் சூர்யாகுமார் யாதவ் போன்றோர் நல்ல பார்மில் உள்ளதால் அணியில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் பும்ரா மட்டுமின்றி அவருக்கு இணையாக போல்ட், பாட்டின்சன் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி தயாராக உள்ளனர். சுழற்பந்து வீச்சில் குருணால் பாண்டியா, சாஹர் ஆகியோர் ரன் வேகத்தை கட்டுப்படுத்த ஒத்துழைத்தாலும், கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி மும்பை கைவசம் சேரும்.
பஞ்சாப் அணியை பொறுத்த வரையில், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் பயங்கரமான பார்மில் உள்ளனர் என்றே கூற வேண்டும். இவர்களுடன், நிக்கோலஸ் பூரான் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் கைகோர்த்தால் மும்பைக்கு இன்றைய நாள் மோசமாகவே அமையலாம்.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சு சற்று குழம்பிய நிலையிலேயே உள்ளது. 226 ரன்களை குவித்தும், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியுற்றது அந்த அணியின் பந்துவீச்சை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஷமி சிறப்பாக செயல்பட்டு வரும் காட்ரல், ஜெமி நீஷம், முருகன் அஷ்வின் ஆகியோரும் சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே, மும்பை அணியின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.
நடப்பு தொடரில், இரு அணிகளும் ஒரு வெற்றியை பிரம்மாண்டமாக பெற்று இருந்தாலும், ஒரு மோசமான தோல்வியையும், வெற்றிக்கு அருகே சென்று சூப்பர் ஓவரில் ஒரு தோல்வியையும் சந்தித்து உள்ளன. இந்த சூழலில் இன்றைய போட்டியாக வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால், போட்டியில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.