மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல். அணி வீரர்கள் ராகுல் சஹார், க்ருணால் பாண்டியா ஆகியோருக்கு கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி யு.ஏ.இ.-யில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சாய்த்தது. முதலில் விளையாடிய கே.கே.ஆர். அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “போட்டியின் ஆரம்பம் முதலே நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். இந்தப் போட்டியின் முதல் பாதி ஆட்டங்கள் வரை நாங்கள் இலக்குகளை துரத்தி விளையாடவில்லை. பெரும்பாலும் முதலில் பேட்டிங் கிடைத்தது.
ஆனால் தற்போது இலக்கைத் துரத்துவதிலும், இலக்கை எதிரணிக்கு நிர்ணயிப்பதிலும் சிறப்பாக இருப்பதாக உணர்கிறோம். இன்றைய ஆட்டத்தில் ராகுல் சஹாரும், க்ருணால் பாண்டியாவும் சிறப்பாக பந்து வீசினர். பேட்டிங்கில் குயின்டன் டி காக் அபாரமாக ஆடினார். அவருடன் சேர்ந்து ஓப்பனிங் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.