கொரோனா தொற்றால் சென்னையில் ஓஎம்ஆர் பகுதி முழுவதும் மிக கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய்தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும் அதனால் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளைவுகளில் இருந்து சென்னை ஐடி நிறுவனங்களும், அதன் சார்பு தொழில்களும் மீளுமா என்பது மில்லியன் டாலர் கேள்விக்குரிய விஷயம்.
கோவிட்-19 நோய்த்தொற்று
2020 ஆம் ஆண்டு தொடக்கமே உலகம் முழுவதும் பேரிடியாய் இறங்கியது கொரோனா என்னும் கோவிட்-19 நோய்த்தொற்று. உலக அளவில் லட்சக்கணக்கான உயிர்களை கொள்ளை கொண்ட கொரோனா உலக பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது.
உலகின் முன்னேறிய, பணக்கார நாடுகள் கூட கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்துறையில் ஐடி துறை மிக முக்கியமான ஒன்று. கடந்த 2016 ஆம் ஆண்டு புள்ளி விபரத்தின் படி இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) ஐடி துறையின் பங்கு மட்டும் 7 புள்ளி 7 விழுக்காடு.
சென்னை வளர்ச்சிக்கு காரணமான ஐடி
2016-17 ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாய் மட்டும் சுமார் 154 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. அதேபோல் தான் சென்னையின் தொழில்துறை வளர்ச்சியின் முக்கிய கேந்திரம் ஐடி தொழில்துறை தான். கடந்த பதினைந்து ஆண்டுகளில் சென்னை விஷ்வரூப வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஐடி நிறுவனங்களின் வருகை தான்.
ஐடி காரிடர்
சென்னையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஏராளமான ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் பழைய மகாபலிபுரம் சாலை என அழைக்கப்படும் ஓஎம்ஆர் சாலை ஐடி காரிடர் என்றே அழைக்கப்படுகிறது.சென்னையில் டைடல் பார்க் தொடங்கி ஓஎம்ஆர் சாலையில் ஆயிரக்கணக்கான ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர் இளம்பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
கொரோனா பரவல் தீவிரம்
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்பிற்குள்ளானது. இந்தப் பகுதியில் உள்ள இந்த ஐடி நிறுனங்களை நம்பித்தான் ஓஎம்ஆர் சாலை முழுக்க வானுயர்ந்த கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என கடந்த 20 வருடங்களில் அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவற்றை நம்பி பலரும் பல வகையான வியாபாரங்களும் உருவாகின. ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டன.
‘ஈ’ ஓட்டத் தொடங்கிய முன்னணி நிறுவனங்கள்
பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஹோட்டல்கள், பிராண்டட் ரெடிமேட் ஷோ ரூம்கள், மொபைல் ஷோ ரூம்கள், சர்வீஸ் சென்டர்கள் எனப் பல வகை நிறுவனங்களும் இந்தப்பகுதியில் கால்பதிக்கத் தொடங்கின. கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெற்று வந்த கடைகள் தற்போது வெறிச்சோடிப் போய் ‘ஈ’ ஓட்டத் தொடங்கியுள்ளன.
கடுமையான நெடிக்கடியில் ஐடி நிறுவனங்கள்
கொரோனா பரவல் அச்சத்தால் தமிழகம் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் சென்னை மிகக் கடுமையான நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டதால் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஐடி நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டன. அதை சமாளிக்க வெளிநாடுகளில் சர்வ சாதாரண நடைமுறையில் இருக்கும் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற நடைமுறையை சென்னையிலும் அறிமுகப்படுத்தின அந்த நிறுவனங்கள். இந்த நடைமுறை ஐடி நிறுவனங்களுக்கு வேறு ஒரு புதிய லாபத்தை ஈட்டித்தந்தது.
எப்படி?…..
ஆயிரக்கணக்கில் ஊழியர்களை கொண்டுள்ள அந்த நிறுவனங்கள் நவீன கட்டமைப்பு கொண்ட வணிக வளாகங்களில் தங்கள் நிறுவனங்களை அமைத்தி்ருந்தனர். மேலும் ஒரு ஷிஃப்டில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலைக்கு வரும் நிலையில் அவர்களுக்கு வாகன வசதி, வேலை செய்யுமிடத்தில் உணவு போன்ற வசதிகள் செய்து தர வேண்டும்.
மேலும் அலுவலகத்தில் பிரம்மாண்ட அளவில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கழிப்பறையை பயன்படுத்தும் போது லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால் வீட்டில் இருந்தே வேலை செய்யும் நடைமுறை செயல்படுத்தப்பட்ட பிறகு ஊழியர்களை பிக்-அப் டிராப் செய்வதற்கான வாகன வசதி தேவையில்லை. அவர்களுக்கான உணவு, காபி, டீ போன்ற உபசரணைகள் தேவையில்லை.
குளிர்சாதன வசதி, மின்விளக்குகள், கம்ப்யூட்டர் சாதனங்கள் என லட்சக்கணக்கில் மின் கட்டணம் கட்டத் தேவையில்லை. கழிப்பறை பயன்பாட்டிற்கு தண்ணீர் வாங்கத் தேவையில்லை. ஹவுஸ் கீப்பிங் போன்ற பராமரிப்பு செலவுகளும் தேவையில்லை. இப்படி ஐடி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மிட்சம் பிடித்துள்ளன. அதிலும் வீட்டில் இருந்து வேலை செய்வதால் பல நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான அளவு குறைக்கவும் செய்துள்ளன. இதிலும் கோடிக்கணக்கில் லாபம் பார்த்துள்ளன ஐடி நிறுவனங்கள்.
இதேபோல் எவ்வளவு பெரிய ஐடி நிறுவனமாக இருந்தாலும் இப்போது அவர்களின் இடத்தேவை மிக சொற்பம் தான். ஊழியர்களின் வேலையை தர மேம்பாடு செய்யும் உயர் அதிகாரிகள் மட்டும் அலுவலகம் வந்தால் போதும். அவர்களுக்காக சுமார் ஆயிரம் சதுர அடியில் வாடகைக்கு கட்டிடம் பிடித்தால் போதும். இப்படி வாடகை வகையிலும் கோடிக்கணக்கில் ஐடி நிறுவனங்களுக்கு லாபம். இதனால் கோடிக்கணக்கில் முதலீடு போட்டு அடுக்குமாடி வர்த்தக கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட்டு வந்த பலரும் இப்போது ஆடிப்போய் இருக்கிறார்கள். இவர்களின் முதலீடுகளில் பெரும்பங்கு வங்கி கடனாகத்தான் இருக்கும்.
உபதொழில்களின் பாடும் திண்டாட்டம்
வாடகை வருவாய் நின்றுபோனதால் வங்கி கடனை கட்ட முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் கட்டிட உரிமையாளர்கள். இதனால் வங்கிகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஐடி நிறுவனங்களை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான உபதொழில்களின் பாடும் திண்டாட்டம் தான்.
ஓம்எம்ஆர் சாலையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்குவதற்காக ஏராளமான பெய்டு ஹாஸ்டல்கள் தொடங்கப்பட்டன. அந்த விடுதிகள் எல்லாம் இப்போது காலி. இதேபோல் பலரும் தங்கள் வீடுகளை ஐடி ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டு காசு பார்த்து வந்தனர். அவர்கள் தலையிலும் விழுந்தது இடி.
சாதாரண வீடுகள் முதல் அபார்ட்மெண்டுகள் வரை அத்தனையும் இப்போது காலி. இதே போல் ஐடி நிறுவனங்களுக்கு கான்ட்ராக்ட் முறையில் வாகனங்கள் இயக்கி வந்த எண்ணற்ற டிராவல்ஸ் நிறுவனங்களும் இப்போது கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளன.
பிரபல டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று ஐடி நிறுவனங்களுக்கு மட்டும் ஆயிரத்திற்கும் மேல் பேருந்துகளை இயக்கி வந்தது. இப்போது அந்த பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த பேருந்துகளுடைய ஓட்டுநர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியானது. பல டிராவல்ஸ் நிறுவனங்கள் தங்களது கார்களை ஐடி நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வந்தன. அவைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதேபோல் லட்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐடி ஊழியர்களை குறிவைத்து ஓம்ஆர் சாலையில் ஏராளமான ஷாம்பிங் மால்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் தொடங்கப்பட்டன. அவை அத்தனையும் தற்போது வெறிச்சோடிக் கிடக்கின்றன.
இப்படி பெரிய அளவிலான உபதொழில்கள் மட்டுமின்றி, ஐடி நிறுவனங்களை நம்பி இயங்கி வந்த கேட்டரிங் நிறுவனங்கள், செல்போன் ஷோ ரூம்கள், உணவு விடுதிகள் முதல் சாலையோர கடைகள், லாண்டரி கடைக்காரர்கள், வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக்குகள், டீக் கடைகள் என ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா கொண்டு வந்த பொருளாதார சீரழிவு
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது கொரோனாவை விரட்டும் என்று நம்புவோம். ஆனால் கொரோனா கொண்டுவந்துள்ள இந்த பொருளாதார சீரழிவு என்னும் கொடிய வைரசை எப்படி விரட்டுவது என்பதுதான் மிகப்பெரிய சவால்.
கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிவந்த பெரிய தொழில்கள் முதல் அன்றாடம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்த சிறு தொழில்கள் வரை எதிர்காலத்தை கேள்விக்குறியோடு சந்திக்கும் அவலத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார பேரழிவை எப்படி சமாளிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் சிந்திக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் இந்த பேரழிவு சென்னையின் பொருளாதார வளர்ச்சியையே கேள்விக்குறியாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாம் சிக்கியிருக்கிறோம் என்பதற்கு ஓஎம்ஆர் சாலையும், ஐடி செக்டாரும் ஒரு சாம்பிள்தான். இது போல் சென்னை முழுவதும், தமிழகம் முழுவதும், இந்தியா முழுவதும் நினைத்துப் பார்த்தால் தலையே சுற்றுகிறது. அரசும், தொழில்துறையினரும் பொருளாதார வல்லுநர்களும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்தால் இன்னும் கொஞ்சம் ஆண்டுகளுக்குள்ளாவது பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
நாளை நமதே….
நம்புவோம் இனிதே….
-சுரா
READ THIS ARTICLE ALSO…