இந்த உலகம், இப்போதுதான் நோயின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விடியலிலும், உலகம் இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. பண்டிகைகளும், வண்ணங்களும் வாழ்வில் மறுபடியும் நம்மிடையே மகிழ்ச்சியை கொண்டு வந்துக் கொண்டிருக்கிறது.
எல்லாமே இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கும் சூழலில், நம் உடல் மட்டும் கொஞ்சம் அசாதாரணமாய் இருக்கின்றது. காரணம், வீட்டிலிருந்து பணி என ஏழு மாதங்களுக்கும் மேலாக எல்லோரும் முடங்கி இருந்திருக்கோம். இந்த முடக்கம், நேரத்துக்கு தூங்காமை – நேரத்துக்கு எழுந்திருக்காமை – நேரத்துக்கு சாப்பிடாமை என ஏராளமான சிக்கல்களை நம்மிடம் கொண்டு வந்திருக்கிறது. இந்த மூன்று பழக்கங்களோடு சேர்த்து, நம்மில் நிறைய பேர், ஒரு நாளின் பெரும்பான்மையான நேரம் உட்கார்ந்தே பணி செய்யவும் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறோம். இந்த `உட்கார்ந்தே பணி’ சூழலில், அதிகபட்சம் லேப்டாப் பார்க்கிறோம், அல்லது மொபைலில் மூழ்கிக் கிடக்கிறோம். அப்படியும் இல்லையெனில் டிவியே கதியென கிடக்கிறோம். இப்படி உடலுக்கு உழைப்பே கொடுக்காமல் இருப்பது, உடல்நலத்துக்கு மிகப்பெரிய கேடு எனக்கூறி, அப்படிப் பணி செய்பவர்களையெல்லாம் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
சில மாதங்களுக்கு முன்பு, மருத்துவ ஆய்வாளர் டாம் யேட்ஸ் கூறும்போது, `பணிக்குச் செல்லும் 36,000-த்துக்கும் மேற்பட்ட நபர்கள் உட்படுத்தப்பட்டிருந்த எங்கள் ஆய்வின் முடிவில், தினமும் 9.30 மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு, அவர்களின் ஆயுளில் சில ஆண்டுகள் கணிசமாகக் குறைவது தெரியவருகிறது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இப்படியானவர்களுக்கு வாழ்நாள் குறைந்து, மரணம் முன்கூட்டியே ஏற்படுகிறது'' என்றிருக்கிறார். இதை வாசிக்கும்போது
பல மணி நேரம் உட்கார்ந்தே வேலைபார்ப்பது, இவ்வளவு ஆபத்தானதா?’ என உங்களுக்குத் தோன்றலாம். உண்மைதான் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த ஆய்வானது, அன்றாடம் அனைவரும் அலுவலகம் சென்று வேலைப் பார்க்கும்போது செய்யப்பட்ட ஆய்வாகும். அன்றாடம் அலுவலகம் செல்லும்போதே, இந்த அளவுக்கு தொய்வு நம்மிடம் இருந்திருக்கிறது என்றால், இப்போது வீட்டிலேயே இருந்துக்கொண்டு – அதுவும் ஒரே மாதிரி உட்கார்ந்துக் கொண்டு – சரியான வாழ்க்கைமுறையும் இல்லாமல் இருக்கும் போதென்றால், விளைவுகளை சொல்லவா வேண்டும்?
பல மணி நேரம் ஒரே பொசிஷனில் அமர்ந்தே இருப்பதால் என்னென்ன பிரச்னைகளெல்லாம் வரலாம் என்பது குறித்து, மேற்கூறிய ஆய்வை செய்த மருத்துவரின் குழு, சில விஷயங்களை முன்வைத்திருந்தது. அவை,
- உட்கார்ந்த நிலையில் வேலைபார்க்கும்போது, கால்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படத் தொடங்கும். கால்கள் இரண்டும் அசைக்கப்படாமல் ஒரே நிலையில் அதிக நேரம் இருக்கும்போது, தசைப்பகுதிகள் பலவீனமாகத் தொடங்கும். இது தொடரும்போது, வயதாகும்போது எளிதில் தடுமாறிவிழும் சூழல் உருவாகலாம்.
- உடலுக்கு அசைவு கொடுக்காமல் இருப்பதால், அடிக்கடி செரிமானப் பிரச்னைகள் ஏற்படலாம். இது அசிடிட்டி தொடங்கி வளர்சிதை மாற்றங்கள்வரையில் பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தும். இவை, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
- மூட்டுப் பகுதிகள் வலிமை இழக்கத்தொடங்கி, இளம் வயதிலேயே மூட்டுப் பிரச்னைகள் ஏற்படலாம். உடலின் போஸ்ச்சரில் சிக்கல் போன்றவை ஏற்படும். இளம் வயதிலேயே கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளில் வலி ஏற்படத் தொடங்கும்.
- உட்கார்ந்தே பணிபுரிபவர்கள் பலரும், பணி நேரத்தில் வழக்கத்தைவிடக் குறைவாகவே மனிதர்களை அணுகுவார்கள். இது மனஅழுத்தத்துக்கு வழிவகுக்கலாம். நீண்ட நாள் மனஅழுத்தம், மனநலச் சிக்கல்களை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாழ்வியல் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.
- தொடர்ச்சியாகப் பல மணி நேரம் கணினி பார்க்கும்போது, கண் பிரச்னைகள் வரக்கூடும். குறிப்பாக வறண்ட கண்கள், டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெயின் போன்ற பிரச்னைகளுக்கான வாய்ப்புகள் அதிகம்.
- அன்றாட வாழ்வில் நீண்ட நேரம் நிற்பவர்கள் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு, வெரிக்கோஸ் வெயின்ஸ் பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காலின் ரத்தக் குழாய்கள் சுருண்டு, வீக்கம் அடைந்து, புடைத்து வெளியே தெரிவது வெரிக்கோஸ் வெயின்ஸ் எனப்படும். சிலருக்கு `டீப் வெயின் த்ரோம்போசிஸ்’ என்ற பிரச்னையும் ஏற்படலாம். இது, கால்களிலுள்ள நரம்புகளில் ரத்தக்கட்டு ஏற்படுவது.
இந்தப் பிரச்னைகளையெல்லாம் தடுக்கவும், மேற்கொண்டு வரும் நாள்களில் நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கி – உலகத்தோடு சேர்ந்து, உங்கள் உடலும் இயல்புக்கு திரும்பவும், எங்கள் சார்பில், உங்களுக்காக சில ஆலோசனைகள் இங்கே….
- உட்கார்ந்தே பணி செய்பவர்கள், தங்களின் பணிக்கு இடையில், கழுத்து – தோள்பட்டை – கைகளுக்கு அடிக்கடி உடலை நன்கு ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும்.
- மனித உடலமைப்பே, நின்ற வடிவில் செயல்படும் வடிவில் வடிவமைக்கப்பட்டதுதான். நிமிர்ந்து நின்றபடி செயலாற்றும்போது, இதயம் தொடங்கி எலும்பு, அடிவயிற்றுப் பகுதி போன்றவையாவும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியோடும் செயல்படும்.
- உலக சுகாதார நிறுவனத்தின் வலியுறுத்தலின்படி 18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும் அன்றாடம் 150 நிமிடங்களுக்கு (2.15 மணி நேரம்) ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். ஆகவே தினமும் இத்தனை மணி நேரம், உடற்பயிற்சிக்கு கட்டாயம் ஒதுக்குங்கள். காலை அல்லது மாலையில் சைக்கிள் ஓட்டுவது, தினமும் 45 நிமிடங்களாவது வாக்கிங் மேற்கொள்வது போன்றவை, இந்த டார்கெட்டை பூர்த்திசெய்ய உதவும்.
- அமர்ந்தே பணிபுரிவர்கள் அனைவருமே, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது எழுந்து நடக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம், கண்களுக்கு அசைவுகள் கொடுக்க வேண்டும்.
- அலுவலக வேலை செய்யும்போது, ஒரே பொஸிஷனில், இயந்திரத்தனமாக இல்லாமல், இயல்பாய் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும், பழச்சாறு – இளநீர் போன்ற நீர் ஆகாரம் அதிகம் பருக வேண்டும்.
- உணவில், எண்ணெய் பொருள்கள் – வெள்ளைச் சர்க்கரை – உப்பு போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகள், பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கொரோனாவிலிருந்து மீண்டுக் கொண்டிருக்கும் இந்த புத்தம் புதிய உலகத்துக்கு, மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக தயாராவோம், வாருங்கள்!
கட்டுரையாளர் : ஜெ.நிவேதா