அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எல்லா கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை, அறிக்கை வெளியீடு, தேர்தல் பிரச்சாரம் என நிற்க நேரம் இல்லாமல் ஒடிக் கொண்டிருக்கிறது. பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. முதலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சை உட்கட்சி மோதலாக வெடிக்குமோ என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தன.
ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் ஒருமனதாக அறிவிக்கப்பட்டனர். துணை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். மேலும் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என அதிமுக அறிவித்திருந்தது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு பாஜகவின் மாநில தலைவர் எல். முருகன் அவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அதிமுக, பாஜக கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா?
அமித்ஷாவின் அரசியல் வருகையே அரசு விழாவாக இல்லாமல் அரசியல் விழாவாக இருந்தது. மேலும், பாஜக கூட்டணி தேர்தலில் அதிக இடங்களை கேட்பதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக விற்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறதா என்ற கேள்வியும் எழுந்தது. அடுத்து, பாஜக நடத்த இருந்த வேல் யாத்திரையையும் தமிழக அரசு தடை செய்தது. தடையை மீறியும் சில இடங்களில் பாஜகவினர் வேல் யாத்திரையை நடத்தினர்.
இவ்வாறு அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகமாகியுள்ளது. பாஜக மாநில தலைவர் எல். முருகனின் முதல்வர் வேட்பாளர் பற்றிய இந்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவரிடம் விளக்கம் கேட்ட போது, நாங்கள் எந்த இடத்திலும் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்கிறோம் என அறிவிக்கவில்லை. கண்டிப்பாக முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவிக்கிறார். இது பற்றி அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, “கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து எல்.முருகன் பேசி வந்தால், பாஜக தலைமை அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டி வரும்” என்று கூறியுள்ளார். முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் இதை யாரும் மாற்ற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூட்டணி தர்மத்தையும் கடைபிடிக்க வேண்டும். இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி நிலைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.