தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -1 தேர்வு நேற்று நடைபெற்றது. இது துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடந்த குரூப்-1 முதல்நிலை தேர்வு. மாநிலம் முழுவதும் 856 இடங்களில் நடத்தப்பட்ட தேர்வில், சுமார் 2,50,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.இதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி பேசு பொருளாகி உள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் நிறுவன தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு, வெளிவந்த படம்’பரியேரும் பெருமாள்’. வெளிவந்த நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. ஜாதி ரீதியாக ஒடுக்கப்படும் ஒரு மாணவன், எவ்வாறு அதை உடைத்து வெளியே வருகிறான் என்பது தான் கதைக் கரு. இந்த படம், வழக்கம் போல், சாதி வெறியில் ஊறியவர்களால் எதிர்க்கப்பட்டது. சமூக நீதி பேசுபவர்களால் கொண்டாடப்பட்டது.
படம் வெளியாகி இரண்டு வருடம் ஆன பின்பும் அதன் தாக்கம் குறையாமல் இருப்பதற்கு காரணம் அதில் சொல்லப்பட்ட கருத்து. ஜாதி ரீதியாக ஒருவர் எவ்வளவு கீழ்தரமாக நடத்தப்படுகிறார் என்பதை தோலுரித்துக் காட்டிய படம். மேலும், ஜாதி வெறி ஒருவரை எப்படி மிருகத்தனமாக மாற்றும் என்பதற்கும் இந்த படம் ஒரு சான்று.
குரூப் -1 தேர்வில் இந்த படத்தைப் பற்றிய கேள்வி இடம் பெற்றுள்ளது மூலம் படிக்கும் இளைஞர்களிடம் படத்தில் சொல்ல வந்துள்ள செய்தி சென்று சேரும். இது பற்றி படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது ; இது மானுட சமூகத்தின் பிரதி ” என்று தெரிவித்துள்ளார். ஜாதி வெறியின் கொடுமைகளைப் பற்றி இளைஞர்களிடம் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வளரும் சமுதாயத்தினருக்கு ஜாதி வெறியைப் பற்றி முழுமையான புரிதலை ஏற்படுத்தினால் தான், அவர்கள் எது சரி எது தவறு என்பதை புரிந்து சரியான வழியை தேர்ந்தெடுப்பார்கள். ’பரியேரும் பெருமாள்’ படத்தில் , ”வெறி கொண்டு படிச்சேன் அன்னைக்கி என்ன பாத்து ஒதுங்கி போனவன் எல்லாம் இப்போ வணக்கம் வச்சிட்டு போறான்” இப்படி ஒரு வசனம். கல்வி மட்டுமே ஒரு மனிதனை மனிதனாக மாற்றும்.