நீதித்துறையின் பெருந்தன்மை நெகிழச்செய்துள்ளது, நீதித்துறை மீது பெரும் மதிப்பு வைத்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை:
நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா நீதிமன்றத்தை அவமதித்தாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், சூர்யா மீதான நடவடிக்கை எடுக்க அவசியமில்லை என முன்னாள் நீதிபதிகள் 6 பேரும் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்த நிலையில், சூர்யா மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டார். இந்த உத்தரவை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா, இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய நீதித்துறை தான் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்கிறது எனவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்பதாகவும் நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.