மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள், தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதை அறிந்த முதலமைச்சர், மாணவர்களைப் பாரட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த கண்ணன் – கலைவாணி தம்பதியரின் மகன்கள் பாலச்சந்தர், பாலகுமார். இரட்டையர்களான இவர்கள், அங்குள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
சிறு வயது முதலே கல்வி மீதும், அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதும், மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்கள், பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கேற்கும் வழக்கத்தைக் கொண்டவர்கள். அந்தப் போட்டிகளில், சிறு சிறு கருவிகளைச் செய்து, பரிசுகளையும் சான்றிதழ்களையும், பாரட்டுக்களையும் பெற்று வந்துள்ளனர்.
இவர்களது சிறு வயதில், இவர்களின் தந்தை விபத்தில் சிக்கி, ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிரிழந்துள்ளார். இதேபோல ஒரு நிலைமை வேறு யாருக்கும் வந்துவிடக்கூடாது என்று எண்ணிய இரட்டை சகோதரர்கள், ஆம்புலன்ஸ் வரும் வழியில் தாமதத்தைத் தவிர்க்க, புதிய கருவி ஒன்றை கண்டுபிடிக்கும் முனைப்போடு செயல் பட ஆரம்பித்தனர். இதன் விளைவாக, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து சாதித்துள்ளனர்.
இதன்படி, அவசர உதவி தேவைப்படுபவர்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டதுமே, இரண்டு கி.மீ., துாரத்திற்கு முன்பே ஆம்புலன்சில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்துவிடும். இதைதொடர்ந்து சர்க்யூட் போர்டு தானாக இயங்க ஆரம்பித்து, ரோட்டோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஒலி பெருக்கியில் ‘ஆம்புலன்ஸ் வருகிறது, வழிவிடுங்கள்’ என்று தெரிவித்து, ஊதா நிறத்தில் விளக்குகளை ஒளிரச் செய்ய ஆரம்பிக்கும். மேலும், ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட தூரத்தைக் கடந்ததும், கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு, சேவை துண்டிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடும் ஒலிபரப்பும் நிறுத்தப்படும்.
இதுக்குறித்து, தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‟மதுரை-மேலூரை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார் ஆகியோர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி விரைந்துவர “தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை” கண்டுபிடித்துள்ளது பாராட்டிற்குரியது. சகோதரர்கள் இருவரது உன்னத கண்டுபிடிப்புகள் தொடர எனது நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இவர்களது கண்டுபிடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இவர்கள் மேலும், மேலும் இதுபோல பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று பலரும் வாழ்த்து வருகின்றனர்.