கொரோனா தொற்று காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ள, பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைந்து மீண்டு வர திரைநட்சத்திரங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல் களை பாடியவர், தனது குரல்வளம் கொண்டே தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவருக்கு வயது 74. கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. “2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன்” என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டி, ரஜினி உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்களின் கோரிக்கையின் பேரில், இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே திரைப்பிரபலங்கள் மவுன கூட்டு ரார்த்தனையில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் எஸ்.பிபி பாடல்களை ஒலிக்க விட்டு ரசிகர்களும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். எஸ்.பி பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.