ஈரோடு அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி, அரசுப் பேருந்து வந்துகொண்டு இருந்தது. லக்காபுரம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கிய இருசக்கர வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பேருந்தில் பயணித்த பயணிகள் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்தில் பயணித்து காயமடைந்த பயணிகளை முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே காவல்துறை விசாரணை செய்ததில், விபத்தில் இறந்தவர்கள் மொடக்குறிச்சி குளூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, மரகதம், பாவாத்தாள், மோகனாபுரி என்பதும், நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, பொது போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் நடந்த இந்த பேருந்து விபத்து அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.