இ-பாஸ் முறைக்கு பதிலாக மாற்றுத் திட்டத்தை ஆலோசித்து வருவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கில் படிப்படியாக அமல்படுத்தப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து, மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கு இ-பாஸ் அவசியமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேசமயம் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாழிடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மலைப்பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் என்பதால் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இ-பாஸ் நடைமுறை தொடர்வதாகவும், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு இ-ரிஜிஸ்டர் முறையை அமல்படுத்த ஆலோசித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறைகளை தொடர்வது குறித்து மத்திய அரசிடம் 3 நாட்களில் விளக்கம் பெற்று, விரிவாக ஊடகங்களில் விளம்பரப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.