சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தேதியை இறுதி செய்யும் வகையில் மாநில மற்றும் உள்ளூர் விடுமுறை தேதிகள் குறித்த விபரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு 2 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இணைவதற்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளதாகவும், வாக்குசாவடிகள் 67 ஆயிரத்தில் இருந்து 93 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்கப்பட்டு வருவதாகவும் சத்ய பிரதசாகு தெரிவித்தார்.
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக தேதியை இறுதி செய்வதற்கு மாநில மற்றும் உள்ளூர் விடுமுறை தேதிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் பெறப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுள்ளதாகவும் சாகு கூறினார். இந்திய தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் நாளை காலை 11 மணிக்கு சென்னை வரவுள்ளனர். நாளை அரசியல் கட்சி பிரதிநிதிகளை தனித்தனியே சந்தித்து கருத்துகள் கேட்கவுள்ளனர். அதே போல அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மண்டல ஐஜிக்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.