தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் 1 ம் வகுப்பு முதல் 8 வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஏற்கனவே 9,10,11 மற்றும் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மழலையர்கள் பள்ளிகளும் நவம்பர் 1-ந்தேதி முதல் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
கடந்த 14ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு. நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுவதுமாக செயல்படும் என அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக அப்பள்ளிகளைச் சேர்ந்த காப்பாளர்கள், சமையல் செய்பவர்கள் என அனைத்து ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், மழலையர் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




