சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் அ.தி.மு.க. அரசின்மீதான தி.மு.க.வின் குற்றச்சாட்டுக்கள் சி.பி.ஐ. அறிக்கையால் நிரூபணம் ஆகியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிவராம பெருமாள் கன்னியாகுமரியில் கொரோனா காலத்தில் மக்கள் பணியாற்றிய மருத்துவர். அவரை அம்மாவட்ட டி.எஸ்.பி. பாஸ்கர் விசாரணை என்ற பெயரில் மிரட்டி, அவரது கண்ணெதிரிலேயே அவருடைய மனைவியைத் தரக்குறைவாக, அவதூறாகப் பேசியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது வேதனையளிக்கிறது.
சாத்தான்குளம் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., இருவர் உடல்களிலும் 18 இடங்களில் காயங்கள் இருந்தன. பென்னிக்ஸை அரை நிர்வாணமாக்கி பின்பகுதியில் தாக்கியுள்ளனர். தந்தை, மகன் இருவர் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று இதயத்தைக் கலங்கடிக்கும் தகவல்களைக் கூறியிருக்கிறது.
அவ்வழக்கின் முக்கிய சாட்சி ஏட்டு ரேவதி, என்னையும், அப்பாவையும் அடிக்காதீர்கள் என்று போலீஸார் காலில் விழுந்து தந்தையும், மகனும் கெஞ்சினார்கள். ஆனாலும், கடுமையாக ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கினார்கள் என்று கூறியிருக்கும் தகவல் கண்கலங்க வைக்கிறது.
ஆனால், இந்தக் கொடூரக் கொலை நடந்த உடன் முதல்வர் பழனிசாமி பென்னிக்ஸுக்கு மூச்சுத்திணறலும், ஜெயராஜுக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டு உயிரிழந்தார்கள் என்று அறிக்கை வெளியிட்டார். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இருவரும் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர் என்றார்.
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் அ.தி.மு.க. அரசின் மீது தி.மு.க. வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது இப்போது ஆதாரபூர்வமாக, சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை வடிவமாகவே வெளிவந்து விட்டது. கொலைகளை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பாரா?. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.