மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டாலும், மொதுமக்கள் மட்டுமல்லாமல், கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், எம்.எல்.ஏ.க்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான 60 வயதான ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சர்க்கரை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை பயல் கோஷை இந்திய குடியரசுக் கட்சியில் சேர்க்கும் நிகழ்ச்சியில், மும்பையில் திங்கள்கிழமை அதாவலே கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சளி, இருமல் தொந்தரவு இருந்துள்ளது. இதனைத்தொடந்து அவர் மேற்கொண்ட பரிசோதனையின் முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரியில், ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் “கோ கொரோனா, கோ கொரோனா” என்று ராம்தாஸ் அத்வாலே கோஷமிடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.