சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த தலில் சந்தின் உறவினர் விஜயகுமார் என்பவர், இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் தலில் சந்த் (வயது 74), அவருடைய மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் குமார் (40) ஆகிய 3 பேரும் கடந்த 11-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா, ஜெயமாலாவின் சகோதரர்களான கைலாஷ் மற்றும் விலாஷ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தக் கொலை சம்பவத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், இந்த சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தலில் சந்தின் உறவினரான விஜயகுமார் என்பவர், அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயகுமார், தலில் சந்தின் சகோதரன் மகன் ஆவார். இவர் சென்னை ஆர்.கே. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் வசித்து வந்தார். விஜயகுமார் மீதும் ஜெயமாலா பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், இவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துள்ளனர். ஆனால், இவர் விசாரணைக்கு வராத நிலையில், தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.