பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக 10 மாதங்களுக்கு மேலாக ஆன்லைனில் தான் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் தான் பொதுத்தேர்வு எழுத உள்ள 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு பாடச்சுமை பாதியாக குறைக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த ஆண்டு தேர்வு தாமதமாக தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜூனில் பொதுத்தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுத்தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மே கடைசி வாரத்தில் துவங்கி, ஜூன் வரை பொதுத்தேர்வை நடத்தலாம் என, கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அட்டவணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.